சட்டசபையிலிருந்து டி.ஆர்.பாலு மகன் ராஜா 10 நாள் சஸ்பெண்ட்!
கடந்த சட்டசபைத் தொடரின்போது செல்போனில் அவை நடவடிக்கைளை வீடியோ எடுத்ததாக ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் ராஜா மீது உரிமை மீறல் தீர்மானத்தை துணை சபாநாயகர் தனபால் கொண்டு வந்தார். அதில் பத்து நாட்களுக்கு ராஜாவை சஸ்பெண்ட் செய்யும் வாசகம் இடம் பெற்றிருந்தது. இதை பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டார் சபாநாயகர். அதன் பின்னர் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 10 நாட்களுக்கு ராஜா சபை நடவடிக்கையில் கலந்து கொள்ளக் கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் நடப்புக் கூட்டத் தொடரிலும், அடுத்த கூட்டத் தொடரில் மிச்சமுள்ள நாட்களிலும் ராஜா கலந்து கொள்ள முடியாது.
இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்க முயன்றார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன்தான் ராஜா.இவர் நடப்பு சட்டசபையில் மன்னார்குடி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.