சென்னை ரயில் நிலையத்தில் 'டென்னிஸ் பால்' வெடிகுண்டு...தப்பின ரயில்கள்!
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே டென்னிஸ் பந்துக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ரயில்வே ஊழியரின் துரித நடவடிக்கையால் போலீஸார் மீட்டு செயலிழக்க வைத்தனர். இதனால் மின்சார ரயில்கள் பெரும் அபாயத்திலிருந்து தப்பின.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று ஊழியர் முருகேசன் தண்டவாளத்தை சோதனை செய்வதற்காக நடந்து சென்றார். அப்போது தண்டவாளம் அருகில் பாலிதீன் கவரால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று கிடந்தது.
இதை பார்த்ததும் முருகேசன் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் ஒரு டென்னிஸ் பந்து இருந்தது. அதற்குள் இரும்பு குண்டுகள், வயர்கள் உள்பட சில பொருட்கள் இருந்தது. வெடி குண்டாக இருக்குமோ என்ற பயத்தில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில் நிலையத்தில் மணல் உள்ள தீயணைப்பு வாளியில் பாலிதீன் பையை வைத்து விட்டு ரயி்ல்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் நிபுணர்கள் குழு இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தபோது டென்னிஸ் பந்துக்குள் நாட்டு வெடிகுண்டில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை மீட்டு பாதுகாப்பான முறையில் தீவைத்து எரித்தனர்.
இந்த குண்டு சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மின்சார ரயில்கள் பேராபத்திலிருந்து தப்பின. இவை வெடித்திருந்தால், மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டை வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.