மகா மெதுவாக நடைபெறும் செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை மாற்றப் பணி
தென்காசி: தமிழ்நாட்டின் செங்கோட்டையிலிருந்து கேரளாவின் புனலூர் இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது.
செங்கோட்டை வழியாக செல்லும் கொல்லம்-சென்னை ரயில் மார்க்கம் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மார்க்கமாகும். இந்திய ரயில்வே வரலாற்றில் பழமையான ரயில் மார்க்கங்களில் ஒன்று.
இந்த மார்க்கத்தில் செங்கோட்டை-புனலூர் பகுதி மிகவும் இயற்கை எழில் வாய்ந்த பகுதியாகும். செங்கோட்டை-புனலூர் ரயில் மார்க்கத்தில் 5 இடங்களில் மலைகளை குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பணி இன்றளவும் மக்களுக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ரயில் மார்க்கத்தில் உள்ள 13 கண் பாலம் மற்றும் சிறு சிறு பாலங்கள் சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக விளங்கி வருகிறது.
கொல்லம்-விருதுநகர், தென்காசி-திருநெல்வேலி, திருச்செந்தூர் அகல ரயில் பாதை பணிகள் கடந்த 1997-98ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் செங்கோட்டை-விருதுநகர், திருநெல்வேலி-திருச்செந்தூர், புனலூர்-கொல்லம் ஆகிய பகுதிகளில் பணிகள் முடிவடைந்து அகல பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் இறுதி மற்றும் கடினமான பகுதியாக கருதப்படும் செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மிகவும் இயற்கை எழில் வாய்ந்த அமைதி தவழும் ஆரியங்காவு, தென்மலை பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மலைகளை குடைந்து தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ள இக்குகைகளை விரிவுபடுத்தும் பணி நடைபெறுகிறது.
இப்பணிகளை இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை பணி முடிவடைந்தால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு செங்கோட்டை வழியாக அகல ரயில் இயக்கப்படும் என்பதால் செங்கோட்டை சுற்று வட்டாரத்தின் பொருளாதாரம் உயரும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.