ராடியா டேப்-டாடாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் வெளியிடக் கூடாது என்று கோரி மத்திய அரசை தொழிலதிபர் ரத்தன் டாடா அணுகலாம். அந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக டாடாவின் வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய பதிவுகளை காக்க வேண்டும், அவற்றை வெளியிடக்கூடாது. குறிப்பாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், மீடியா பிரமுகர்களின் பேச்சுக்கள் அடங்கிய பதிவுகளை வெளியிடாமல் பத்திரப்படுத்த வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட வேண்டும்.இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
அதை ஏற்ற நீதிபதிகள், இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் மனுதாரர்கள் நேரடியாக வைக்கலாம். அதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் நீரா ராடியா டேப் தொடர்பாக ஜனவரி 31ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த விரிவான அறிக்கையை மறு சீல் வைத்துப் பாதுகாக்குமாறும் கோர்ட் ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ராடியா டேப் குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஆடியோ பதிவுகள் வெட்டி, ஒட்டி மோசடியாக திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.