வால்பாறையை கலக்கிய சிறுத்தை சிக்கியது: மக்கள் நிம்மதி
வால்பாறை: வால்பாறை பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டிற்குள் சிக்கியதால் பொது மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வால்பாறை நகரப்பகுதியி்ல் கடந்த சில நாட்களாக வீடுகளில் உள்ள ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இரவு நேரத்தில் வரும் சிறுத்தை ஒன்று அடித்துக் கொன்று தின்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க முடியாமல் பயத்திலேயே இருந்து வந்தனர். மேலும், சிறுத்தை தங்களையும் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் வீடுகளைவிட்டு வெளியே வர பயந்தனர்.
இந்நிலையில் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு செய்து வைக்கப்பட்டது.
அப்போது வழக்கம்போல் அந்த பகுதிக்கு வந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கியது. அதை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.