லஷ்கர் தலைவர் சயீத்துடன் பாக். டிவி விவாதத்தில் மோதிய மணிசங்கர அய்யர்!
மணிசங்கர அய்யர் தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஒரு டிவின் டாக் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது திடீரென சயீத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் போன் மூலம் தொடர்பு கொண்டு அய்யர் உள்ளிட்டோருக்கு அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்தினார். இதனால் மணிசங்கர அய்யர் அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும் அமைதியாக இருந்தார்.
இதையடுத்து சயீத் சில கேள்விகளையும், தனது கருத்தையும் தெரிவித்தார். அவர் பேசுகையில், இந்தியாவுடன் பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ளக் கூடாது. இந்தியாவுக்கு வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்ற அந்தஸ்தைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. காஷ்மீர் பிரச்சினை அதில் ஒன்று. அவற்றை தீர்த்த பின்னரே தர வேண்டும்.
மேலும் பாகிஸ்தானுக்கான தண்ணீரைத் தடுக்கும் வகையில் நிறைய அணைகளையும் இந்தியா கட்டி வைத்துள்ளது என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த மணிசங்கர அய்யர் பேசுகையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நட்புறவு நிலவுவது இந்த சயீத் போன்ற சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் நல்லுறவையே விரும்புகின்றனர்.
சயீத் போன்ற ஒரு சிறிய கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த உறவைக் கெடுக்க முயலுகின்றனர்.
இந்த சயீத்தை முதலில் கைது செய்து தீவரவாத கோர்ட்டின் முன்பு நிறுத்த வேண்டும் என்றார். அதற்கு சயீத் பதிலளிக்க முயன்றார். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
இந்த திடீர் உரையாடலால் பரபரப்பு ஏற்பட்டது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைத் தோற்றுவித்தவர்தான் இந்த சயீத். மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த உலகை உலுக்கிய பயங்கரவாத சம்பவத்தைத் திட்டமிட்ட மூளை இவர். பாகிஸ்தானில் பத்திரமாக தங்கியுள்ளார் சயீத். இவரை இந்தியா தன்னிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கோரியும் இதுவரை ஒப்படைக்காமல் உள்ளது பாகிஸ்தான்.
இப்படிப்பட்ட தீவிரவாத தலைவரை மணிசங்கர அய்யருடன் பாகிஸ்தான் டிவி நிறுவனம் கேள்வி கேட்க வைத்தது இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.