வாழைப்பழம் விலை பத்து ரூபாயாகிடுச்சி!
ஆலங்குளம் காய்கறி சந்தைக்கு ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களான கல்லிடைக்குறிச்சி, அம்பை, ஆத்தூர் பகுதிகளில் இருந்து தினமும் வாழைத்தார் லோடு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வாழைத்தார் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் நாட்டு வாழைப்பழம் கற்பூரவள்ளி, கோழிக்கூடு உள்பட அனைத்து வகை பழங்களின் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
வாழை உற்பத்தி குறைவால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டு வாழைப்பழம் ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரை விற்கப்படுகிறது. ஒரு வாழைக் குழையில் 90 பழங்கள் வரை இருக்கும். ஒரு தார் நாட்டு வாழைப்பழம் ரூ.350 முதல் ரூ.400 வரை உயர்ந்து விட்டது. கோழிக்கூடு பழம் ஒரு குலை ரூ.700 வரை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு பழத்தை ரூ.10 விற்றால்தான் கட்டுபடியாகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாழைப்பழம் ஓன்று ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. கற்பூரவல்லி பழம் ரூ.3க்கு விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வாழைப்பழங்களின் விலை ஏற்றத்தால் தினசரி அவற்றை வாங்கி உண்ணும் நடுந்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.