எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்
திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு தரப்படும் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அந்தப் பேச்சுக்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் சிதறுத் தேங்காய் போல சிதறிப் போன நிலையில, ஸ்டாலினின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
திருச்சிக்கு வந்த ஸ்டாலின் அங்கு கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக இளைஞர் அணி நேர்காணலில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
இளைஞரணி தான் தி.மு.க.வின் சொத்து. 1950-ல் மதுரை ஜான்சி ராணி மைதானத்தில் இளைஞர் அமைப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதன்பின்னர் திருச்சியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது இளைஞரணிக்கு தலைவர் யார் என கேட்கப்பட்டது. அப்போது தி.மு.க. கட்சிக்கு தலைவர் கலைஞர், இளைஞரணி தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்கள்.
அந்த சமயம் பொது செயலாளர் அன்பழகன், இளைஞரணி அமைப்பு குழுவை ஏற்படுத்தி அதன்பின்னர் நிர்வாகிகள் தேர்வு செய்யலாம் என்றார். அந்த குழுவில் நான், பரிதி இளம்வழுதி, சிவா எம்.பி., பஞ்சவர்ணம், பாரதி இளவல் உள்ளிட்டோர் இடம் பெற்றோம்.
இந்த குழு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்தோம். அதன்பின்னர் மாவட்டம், ஒன்றியம், நகரம், வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதன் பிறகுதான் நான் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் இப்போது வயதானவர்களாக உள்ளனர்.
எனக்கு 59 வயதாகிறது. வயதானாலும் நான் இளைஞராகவே உணருகிறேன். இருப்பினும் இளைஞர் அணியில் மாற்றம் வந்தால்தான் வலு சேர்க்க முடியும் என்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 2 நாட்களாக நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பல கருத்துக்குள் பரிமாறப்பட்டன. அப்போது சிவா எம்.பி. பேசுகையில் அன்று இருந்த இளைஞர்களுக்கு உள்ள உணர்வு இப்போது உள்ள இளைஞர்களுக்கு இல்லை. மொழிப்பற்று, இனப்பற்று குறைவு என்று கூறினார். இது உண்மைதான். ஆனால் தற்போது கால சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர அண்ணாவின் பேச்சாற்றல், கலைஞரின் உழைப்பு ஆகியவை இருந்தாலும் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி, இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவையும் முக்கிய காரணம்.அத்தகைய உணர்வு உள்ள இளைஞர்கள், இளைஞர் அணியில் இன்றைக்கு தேவை.
இன்று நடந்த இளைஞரணி நேர்காணில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். தற்போது தேர்வாகும் நிர்வாகளுக்கு மாவட்டம் தோறும் பாசறை கூட்டம் நடத்தப்படும். இளைஞரணிக்கு தேர்வு செய்யப்படுவது போல தொண்டரணி, மாணவரணி, வக்கீல் அணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எத்தனை அணிகள் தி.மு.க. வில் இருந்தாலும் இளைஞர் அணிதான் தி.மு.க.வின் சொத்து என்றார் அவர்.