விஜயகாந்த் சஸ்பெண்ட்: உரிமைக்குழு முடிவில் யாரும் தலையிட முடியாது- அமைச்சர் கே.வி. ராமலிங்கம்
ஈரோடு: உரிமைக்குழு தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சட்டசபையில் 10 நாட்கள் சஸ்பெண்ட் செயத்து. அதன் முடிவில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்று அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சட்டசபையில் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், இது ஜனநாயக மரபுகளை உடைக்கும் செயலாகும் என்றார். சஸ்பெண்ட் உத்தரவு மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் கே.வி. ராமலிங்கம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விஜயகாந்த் சட்டசபையில் எனக்கு அருகில் தான் அமர்ந்திருக்கிறார். சட்டசபையில் கையை நீட்டி ஆபாசமாகப் பேசியதாலே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இது தவறு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர். உரிமைக்குழு தான் விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. அந்த முடிவில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை.
கடந்த திமுக ஆட்சியில் அனைத்து அரசுத் துறைகளும் சீரழிந்துவிட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு துறையாக சீரமைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் காங்கிரஸுடன் கூட்டணியிலும், மாநிலத்தில் ஆட்சியிலும் இருந்தபோது திமுக முல்லைப் பெரியாறு பிரச்சனையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது ஆட்சியில் இல்லாதபோது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கேலிக்கூத்தானது என்றார்.