லோக்பால் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கலாகிறது ?
டெல்லி: லோக்பால் மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஊழலை ஒழிக்கவும், ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த நாடாளுமன்றக் குளிர் கால கூட்டத் தொடரின் இறுதியில் கொண்டு வரப்பட்டது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா பெரும்பான்மை வெற்றி பெற்றது. ஆனால் ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய இருந்த சமயத்தில், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளே ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
அங்கு மசோதா தோல்வி அடையும் என்பது உறுதியானதால், தாக்கல் செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர், இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ராஜ்யசபாவில் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.