20ம் தேதி முதல் 2 மாதத்திற்கு விழுப்புரம்-காட்பாடி இடையே தினசரி ரயில்
விழுப்புரம்: வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை விழுப்புரம்-காட்பாடி இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விழுப்புரம்-காட்பாடி இடையே வரும் 20-2-2012 முதல் 15-4-2012 வரை தினமும் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 06842) காலை 8.45 மணிக்கு காட்பாடியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (06841) இரவு 9.45 மணிக்கு விழுப்புரத்தை வந்தடைகிறது.
இந்த ரயிலில், 6 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். விழுப்புரம்-காட்பாடி இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.