2ஜி ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?: அத்வானி கேள்வி
தொலைதொடர்புத்துறை அமைச்சராக ராசா இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக அந்த நிறுவனங்களின் லைசென்ஸ்களை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது. இந்த ஊழலுக்கு முழுவதும் ராசா மட்டுமே காரணம் என்பதுபோல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஊடகங்களில் தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அத்வானி, 2ஜி ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, இம்முறைகேட்டிற்கு, அப்போதைய மத்திய அமைச்சர் ராசா மட்டும் தான் பொறுப்பு என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி காட்டிக் கொள்வது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தொடர் ஊழல்கள்
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஊழல்களின் பல்கலைக்கழகமாக உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், 2ஜி முறைகேடு, காமன்வெல்த் போட்டி முறைகேடு, குவாட்ரோச்சி விவகாரம், ஆதர்ஷ் ஊழல், மத்திய கண்காணிப்பு ஆணையராக ஊழல்கறை படிந்த தாமஸ் நியமனம், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கல், ஹசன் அலி வரி ஏய்ப்பு என ஊழல் செய்வதில் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
ராசா ஒருவரால் மட்டுமே இத்தனை முறைகேடுகளை செய்திருக்க முடியும் என்பது நம்ப முடியவில்லை. இந்த முறைகேடுகளில் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இவர்களை, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அத்வானி கூறினார்.