ஹோட்டலில் பதுக்கப்பட்ட ரேஷன் சீனி, பாமாயில் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
களக்காடு: களக்காடு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் சீனி, பாமாயில் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
களக்காடு அருகே உள்ள டோனா ஆர் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் பொருட்கள் முறைகேடாக கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நாங்குநேரி வட்ட வழங்கல் அதிகாரி சங்கரவடிவு மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் கடை ஊழியர் குற்றாலம் போலி பதிவு மூலம் 226 கிலோ அரிசி, 26 கிலோ சர்க்கரை, 171 கிலோ துவரம் பருப்பு, 13 கிலோ உளுந்தம்பருப்பு, 7 லிட்டர் பாமாயில், 15 கிலோ ஆட்டா ஆகியவை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் விகிதாசார கூடுதல் முறையில் 480 கிலோ அரிசி, 52 கிலோ சர்க்கரை, 39 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள் மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் கடைக்கு அருகே உள்ள கீழகட்டளையைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் ஹோட்டலில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் சர்க்கரை 50 கிலோ, 7 லிட்டர் பாமாயில் ஆகியவறறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை ஊழியர் குற்றாலம் மீது நடவடிக்கை எடுக்கும்படி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு வட்ட வழங்கல் அதிகாரி சங்கரவடிவு பரிந்துரை செய்தார்.