குடிபோதையில் அநாகரீகமாக நடந்த இலங்கை அமைச்சருக்கு எதிர்ப்பு
கோவை: கோவை நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஆறுமுகம் தொண்டைமானும் கோவையும்
இலங்கை ஊரக தொழில் துறை அமைச்சராக இருப்பவர் மலையகத் தமிழரான ஆறுமுக தொண்டைமான் (வயது 46).
கோவையில் இவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதால் அடிக்கடி கோவைக்கு வருவார். கோவை சாய்பாபா காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, ஆறுமுக தொண்டைமான் கோவை வந்து இருந்தார்.
கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அன்று இரவு குடிபோதையில் ஓட்டலில் அவர் ரகளையில் ஈடுபட்டதாகவும் இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அறைக்குள் தள்ளி கதவைப் பூட்டியதாகவும் தகவல் பரவியது.
போராட்டம்
இதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமான் அநாகரீகமாக நடந்து கொண்டதாகல் அவரை திருப்பி இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி நாம் தமிழ்ர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மேலும் 2 லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்ட நிலையில் இலங்கை அமைச்சர் தமிழ்நாட்டில் வந்து குடித்துவிட்டு கும்மாளம் போடுவதா? என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அனுமதியின்றி நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைய முயன்றனர். உடனே போலீசார் தடுத்து நிறுத்தி 14 பேரை கைது செய்தனர்.
இதனிடையே ஆறுமுகம் தொண்டைமானை கோவையில் இருந்து பாதுகாப்புடன் வெளியேற்றிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.