ஆயில் மில்லுக்குக் கூட்டிச் சென்று ராவணனிடம் கிடுக்கிப் பிடி விசாரணை
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த கிச்சகத்தியூரை சேர்ந்தவர் ரவிக்குமார், காண்டிராக்டர். இவரை மிரட்டி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.
இதற்கிடையில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் மணல் குவாரி காண்டிராக்ட் எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக ராவணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ரூ.10 லட்சம் மோசடி தொடர்பாக ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து ராவணனிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு ஒரு நாள் அனுமதி அளித்து மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் ரபி உத்தரவிட்டார்.
அதன்பேரில் ராவணன் மற்றும் அவரது உதவியாளர் மோகன் ஆகியோரிடம் விசாரணை முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை 2 பேரும் மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைத்து மாஜிஸ்திரேட்டு ரபி உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, கோவை-திருச்சி சாலையில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்தில் வைத்து தன்னை ராவணனும், அவரது உதவியாளர்களும் மிரட்டியதாக காண்டிராக்டர் ரவிக்குமார் புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் ராவணனை கோவை மாவட்ட குற்றப்பதிவேடு போலீசார் திருச்சி சாலையில் உள்ள ராகா ஆயில் மில் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
30 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் ராவணனை போலீசார் திரும்ப அழைத்து சென்றனர்.
அங்கு என்ன நடந்தது, விசாரணையில் ராவணன் எதையாவது கக்கினாரா என்பது குறித்துத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல முக்கியத் தகவல்களை போலீஸார் கறந்துள்ளதாக நம்பப்படுகிறது.