ஒரு வேளை கிலானிக்கு சிக்கல் வந்தால்.. யார் அடுத்த பிரதமர்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீதான வழக்குகளை விசாரிக்க மறுத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரதமர் கிலானி அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகிறார். இதில் அவருக்கு எதிராக உத்தரவு வந்தால் அவர் பதவி விலக நேரிடும் என்பதால் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, சட்டத்துக்கு விரோதமாக சுவிஸ் வங்கிகளில் பல கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குகளும் நிலுவையில் உள்ளன. ஆனால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் முஷரப் தனது பதவிக்காலத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கத்தக்க விதத்தில் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார். இந்தச் சட்டம் சர்தாரி உள்பட 8 ஆயிரம் பேருக்கு பயன் அளித்தது. ஆனால் அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்து விட்டது. அப்போது முதல் ஆசிப் அலி சர்தாரி மீதான பணப்பரிவர்த்தனை தடை வழக்குகளை எடுத்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வந்தது.
ஆனால் அதை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஏற்று செயல்பட மறுத்து வந்தது. ஏனெனில் அப்படி சர்தாரி மீதான சுவிஸ் பணக்குவிப்பு வழக்குகளை மீண்டும் எடுத்து விசாரிக்க தொடங்கினால், அரசியல் சட்டம் அதிபருக்கு வழங்கியுள்ள விதிவிலக்கு அதிகாரத்திலும் அது தலையிடும். இதனால் சர்தாரியின் பதவிக்கு ஆபத்து வரும். இதனால் பாகிஸ்தான் அரசு சர்தாரி வழக்குகளை விசாரிக்க மறுத்தது. இதையடுத்து கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வ்ழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் யூசுப் ராசா கிலானி மீது சுப்ரீம் கோர்ட், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் கிலானி கடந்த 19-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி வாதிட்டார். பாகிஸ்தானிலும், வெளிநாடுகளிலும் அதிபர் மீதான விசாரணைக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே அவர் மீதான வழக்குகளை மீண்டும் எடுத்து விசாரிக்க முடியாது என்றார்.
ஆனால் அவரது முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. சர்தாரிக்கு எதிரான வழக்குகளை எடுத்து விசாரிக்குமாறு சுவிஸ் அதிகாரிகளுக்கு எழுதுவதை தவிர வேறு வழியே இல்லை, ஒருவரும் சட்டத்தை விட மேலானவர் அல்ல என்று கூறி விட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தது.
கிலானிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான பெஞ்சு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது கிலானி நேரில் ஆஜர் ஆகிறார். அவர் தனது பழைய நிலைப்பாட்டையே உறுதி செய்வார் என்று ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே பிரதமர் கிலானி தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் தண்டிக்கப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை வழங்க நேரிடலாம். இதனால் அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எந்த அரசு பதவியும் வகிக்க முடியாத நிலை வரும். எனவே அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.
இருப்பினும், கிலானி தண்டிக்கப்பட்டாலும் அதிபருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்த பிரதமர் யார்?
கிலானி தண்டிக்கப்பட்டு, பதவி இழக்கும் சூழலில் மத விவகாரங்கள் துறை அமைச்சர் குர்ஷித் ஷா, ராணுவ அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் ஆகியோருக்கு புதிய பிரதமர் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.