போராடிய நர்ஸுகளுக்கு டிமிக்கி கொடுத்து 'எஸ்' ஆன கர்நாடக முதல்வர்!
பெங்களூர்: போராட்டம் நடத்தி வரும் நர்ஸ்கள் கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவை சந்திக்க முயன்றபோது வேகம் வேகமாக வெளியேறி காரில் ஏறி ஓடி விட்டார் அவர்.
கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நர்ஸுகள் தங்கள் பணிகளை நிரந்தரமாக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர் வரும் தகவல் அறிந்த நர்ஸுகள் முதல்வரை சந்தித்து தங்கள் கோரி்க்கைகளை தெரிவிக்க வந்தனர்.
ஆனால் சதானந்த கௌடா விவசாயிகளை மட்டும் சந்தித்து பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். காரில் ஏறி வேகமாக ஓடி விட்டார். மேலும், அவரை சந்திக்க முயன்ற நர்ஸுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக, விவசாயிகள் தலைவர் நஞ்சுண்டசாமியின் 76வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார் கெளடா. அப்போது புட்டனையா என்பவர் நீங்கள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த மேனிக்கு இருந்தால் போதாது மற்றவர்களும் சிரிக்கும்படி செய்ய வேண்டும் என்று முதல்வரைப் பார்த்து கூறினார்.
இதில் கடுப்பான முதல்வர் கூறுகையில், நான் பிறக்கையிலேயே சிரித்த முகத்துடன் பிறந்தேன். யார் மனதையும் புன்படுத்த நான் சிரிப்பதில்லை. நான் மட்டும் சிரிக்க வேண்டும் மற்றவர்கள் சிரிக்கக் கூடாது என்பது எனது நோக்கம் அல்ல. எனது சிரிப்பின் அர்த்தத்தை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றார்.