சங்கரன்கோவில் தொகுதியில் தனித்துப் போட்டியா?: ஜி.ரா. விளக்கம்
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு மிக மோசமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மின்சார தேவையை பூர்த்தி செய்யு எந்த அரசும் முயற்சி மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ்நாட்டில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் இருண்ட தமிழகமாக உள்ளது.
ஆட்சி மாற்றம் தேவை என்று சொன்னோம். ஆனால் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. கூடங்குளம் அணுஉலையை அந்த பகுதியின் மக்களின் அச்சத்தை போக்கி உடனே துவங்க வேண்டும்.
வரும் ஆண்டின் கல்வி கட்டணத்தை தற்போதே அரசு பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்றார். அவரிடம் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுமா என்பது குறித்து கட்சி செயற்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.
மேலும் தமிழக அரசியலில் தற்போதைய சூழலின் அடிப்படையில் கூட்டணி மாறுமா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "நாடாளுமன்றத் தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளன. நானும் மதுரைக்கு அடிக்கடி வருவேன். மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி குறித்து அப்போது சொல்கிறேன் என்றார் அவர்.
முன்னதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.