தாக்குதலில் ஈடுபட்டபோது கசாப் சிறுவன், தவறாக வழி நடத்தி விட்டனர்-வக்கீல் வாதம்
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் இந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் கசாப் சார்பில் ஆஜராகி வாதாடி வருகின்றார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் கூறியதாவது, ஒரு தீவிரவாதியை தூக்கில் போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்கையில் அவனைப் பாதுகாக்க எவ்வளவு செலவாகிறது என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு செயல்படக் கூடாது. மும்பை தாக்குதல்கள் நடந்தபோது கசாப் சிறுவனாக இருந்தான். அவனது மத நம்பிக்கையை பயன்படுத்தி அவனை தவறான வழியில் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
சூழ்நிலை காரணமாக நடந்த நூற்றுக்கணக்கான கொலை வழக்குகள் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வழ்ககு முற்றிலும் வித்தியாசமானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
கசாப் வழக்கறிஞரின் வாதத்தை எதிர்த்து மகாராஷ்டிரா அரசின் வழக்கறிஞர் சாலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் இன்று வாதாடுகிறார்.
கசாப் தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனைப் பாதுகாக்க கட்டப்பட்ட அறைக்கான செலவு மட்டும் ரூ.5.24 கோடி ஆகும்.