தமிழக-கேரள எல்லையில் நக்சல்கள் ரகசிய கூட்டம்: ராணுவம் திடுக் தகவல் !
தமிழ்நாடு, கேரளாவில் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் மாவோ நக்சலைட்கள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும், ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி இரு மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுதது வனப்பகுதியில் தமிழக, கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் அதையும் மீறி தமிழக, கேரள எல்லையில் உள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் நக்சலைட்கள் ரகசிய கூட்டம் நடத்தியதாக ராணுவ உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே ராணுவம் மற்றும் போலீஸ் நுண்ணறிவு துறையினர் அச்சன்கோவில் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் ரகசிய கூட்டம் நடத்தியது உண்மை என உறுதியாகி இருக்கிறது.
கடந்த மாதம் 21, 22ம் தேதிகளில் இக்கூட்டம் நடந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நக்சலைட் தலைவரான சேதுராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 50 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரளாவைட் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து தமிழக கியூ பிரிவு மற்றும் நுண்ணறிவு துறை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.