மின்வெட்டைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்-வீரபாண்டியார் தன்னிச்சையாக அறிவிப்பு!!
திமுக தலைமையிலிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வராத நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் இந்த தடாலடி அறிவிப்பு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் வீரபாண்டியார். இது சமீபத்தில் சென்னையில்நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பெரிய அளவில் வெடித்தது. அப்போது வீரபாண்டியாருக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் பெரும் பிரச்சினை எழுப்பியதால் வீரபாண்டியார் தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்யப் போவதாக வீரபாண்டியாரின் மகன் அதிரடியாக அறிவித்ததால் கடும் கோபமடைந்த திமுக தலைமை, அதைக் கண்டித்தும், எச்சரித்தும் அறிக்கை வெளியிட்டது. இந்த எச்சரிக்கைக்கு வீரபாண்டியார் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து வீரபாண்டியாரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கோரி கட்சித் தலைமைக்குப் புகார்கள் பறந்து வருவதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாரும் வீரபாண்டியாரின் போக்கு குறித்து கடும் அதிருப்தியில் இருப்பதால் வீரபாண்டியார் கட்சியை விட்டு நீக்கப்படுவாரோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இன்று தடாலடியாக வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
சேலம் வீரபாண்டியார் நகரில் இன்று வணிகர்கள் மின்தடையைக் கண்டித்து கடையடைப்பு நடத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மின்வெட்டைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
முந்தைய எங்கள் ஆட்சியில் 3400 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்திக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன. அவை வரும் 2013-2014ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அவை வந்தால் மின்தட்டுப்பாடு குறையும்.
இந்த அரசு மின்வெட்டுக்கான நிவாரணமாக எதுவும் செய்யவில்லை. இதைக் கண்டித்து திமுகவினர் ஆர்பாட்டங்களை நடத்துவர் என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.
கட்சித் தலைமை போராட்டம் எதையும் அறிவிக்காத நிலையில் வீரபாண்டியாரின் இந்த அதிரடி அறிவிப்பு திமுகவுக்குள் மீண்டும் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.