சத்தாய்க்கும் ஈரான்... பதட்டப் புயலில் ஹோர்முஸ் ஜலசந்தி!
டெக்ரான்: அணு சக்தி வல்லமையை ஈரான் பகிரங்கமாக பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி போர்முனையாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் முறுகல் ஏற்பட்டது முதலே ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றப் புயல் மையம் கொண்டுவிட்டது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. ஈரானையொட்டி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பெர்சியன் வளைகுடாவையே தாண்ட முடியும்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமானால் ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடுவோம் என்று ஈரான் அறிவித்திருந்தது. ஹோர்முஸை மூடினால் பதிலடி கொடுப்போம் என்ற அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதங்களைத் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்கியுள்ளது. ஈரானின் 21 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இக்கப்பல் முகாமிட்டிருக்கிறது.
இந்நிலையில் புதன்கிழமையன்று அணுசக்தி வல்லமையை பகிரங்கமாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்த நிலையில் போர் விமானங்களையும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டணி ஏற்கெனவே ஈரான் மீது விதித்த தடையை இந்தியா பகிரங்கமாகவே எதிர்த்தது. ஈரானுக்கு வர்த்தகக் குழுவை அனுப்பும் முடிவில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஹேர்முஸ் ஜலசந்தியில் போர்க்களத்தை உருவாக்கும் நிலையில் தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் இதனை ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கை ஒபாமாவின் அரசியல் லாபத்துக்கான ஒன்றாகவும் உலக நாடுகள் கருதுகின்றன.
எதிர்வரும் அதிபர் தேர்தல் செல்வாக்கு சரிந்துபோய் கிடக்கும் ஒபாமா, ஈரான் மீதான போர் நடவடிக்கை மூலம் அரசியல் ஆதாயமடைய திட்டமிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.