சிறுதாவூர் பங்களாவுக்கு முதல்வர் ஜெயலலிதா 'விசிட்'
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது முதல்வரின் வழக்கம். அவர் அங்கு செல்லும்போதெல்லாம் தோழியாக இருந்த சசிகலாவும் உடன் செல்வார். அதேபோல கொடநாடுஎஸ்டேட்டுக்கும் அடிககடி செல்வார் ஜெயலலிதா.
சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் கொடநாடு செல்வதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் சசிகலா குடும்பத்தினரின் திடுக்கிடும் செயல்பாடுகள் குறித்து அவருக்குத் தெரிய வந்ததால் அங்கு போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்து சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டும் தனது வீட்டை விட்டும் விரட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு ஓய்வேயில்லாமல் பணியாற்றி வந்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில் நேற்று மாலை ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்கு வருகை தந்தார். அங்குதான் தங்கியுள்ளார். சில நாட்கள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்று தெரிகிறது. அதன் பின்னர் தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு பின்னர் சங்கரன்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்று தீவிரப் பிரசாரத்தில் அவர் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.