சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வாக்கு வங்கி கிடையாது:கொமுக
கோவை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு அங்கு எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்று கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, மதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்து 7 தொகுதிகளில் போட்டியிட்டோம். ஆனால் அனைத்து தொகுதிகளிலுமே படுதோல்வியடைந்தோம்.
இந்த நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் கொமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். அங்கு போட்டியிடும் அளவுக்கு எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்றார்.
சங்கரன்கோவிலில் வரும் மார்ச் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்றது. எப்படியும் அந்த தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.