ராவணனுடன் தொடர்பு: சிக்குகிறார் கூடுதல் டிஜிபி!
கோவை: சசிகலாவின் உறவினர் ராவணனுடன் கூடுதல் டிஜிபி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது பெயரை வெளியிட போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சித்தப்பா மகளை மணந்தவர் ராவணன். அவர் வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கோல்டன் மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் ராவணன் சகல அதிகாரங்களும் பெற்றவராக மாறினார்.
தற்போது அதிமுக ஆட்சியில் உள்ள 145 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 60 எம்.எல்.ஏ.க்கள் ராவணனால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் போலீஸ் விசாரணையி்ல் கேரளாவைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி பெயரும் அடிபடுகின்றதாம்.
இருவருக்கும் இடையே ஏகப்பட்ட டீலிங்குகள் இருந்ததாம். ஆனால் இதனை வெளியி்ட்டால் அந்த அதிகாரியின் பெயர் பாதிக்கப்படுமே என்று விசாரணை அதிகாரிகள் கையை பிசைந்த வண்ணம் உள்ளார்களாம்.
அந்த அதிகாரி யார் என்பது குறித்து போலீஸ் வட்டாரங்களிலே விசாரித்த போது அவர்கள் கூறியதாவது,
கேரளாவில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு, எம்.டெக். படிப்பும் முடித்துவிட்டு அமெரிக்கா சென்று அங்கும் படித்துவிட்டு, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி ஐ.பி.எஸ். பணிக்கு தேர்ச்சி பெற்றவராம்.
அவர் சில ஆண்டுகள் எஸ்.பி.யாக தமிழகத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றியுள்ளார். முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்றனர்.