நட்ட ஈடு தொடர்பாக டெலிநார்- யூனிடெக் இடையே மோதல்!
டெலிநார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எமது முதலீடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு யூனிடெக் நிறுவனம்தான் நட்ட ஈடு அளிக்க வேண்டும். ஏனெனில் எமக்கு அளித்திருந்த உத்தரவாதங்களை அந்நிறுவனம் மீறி உள்ளது. இதனால் நட்ட ஈடு தருவதற்கு அந்நிறுவனம் கடமைப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இணைந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எமது முதலீடுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாது என யூனிடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருநத்தால்தான் நாங்கள் இங்கு முதலீடு செய்திருந்தோம்.
இந்தியாவில் எமது சேவையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக அனைத்து வகையான வாய்ப்புகளையும் பரிசீலிக்க உள்ளோம்.
எதிர்காலத்தில் யூனிடெக் நிறுவனத்துடன் எதுவித ஒப்பந்தமும் செய்துகொள்ள மாட்டோம். இந்தியாவில் எமது சேவையைத் தொடருவதற்காக புதிய பங்குதாரரைத் தேடி வருகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனிடெக் மறுப்பு
டெலிநாரின் நட்ட ஈடுகோரிக்கையை யூனிடெக் மறுத்துள்ளது.
2008-ம் ஆண்டு அரசின் கொள்கைப்படி உரிமங்கள் பெறப்பட்டன. இப்பொழுது இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் எப்படி நாங்கள் உத்தரவாதத்தை மீறியதாக அர்த்தம் என்று யூனிடெக் தமது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
டெலிநார் நிறுவனம் நட்ட ஈடு கேட்க விரும்பினால் மத்திய அரசிடம் கேட்கட்டும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
யூனினார் நிறுவனத்தில் 67.25 பங்குகளில் ரூ6,100 கோடியை நார்வேயின் டெலிநார் நிறுவனம் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குறுகிய கால கடனாக ரூ8 ஆயிரம் கோடிக்கான உத்தரவாதங்களையும் டெலிநார் நிறுவனம் வழங்கியிருநதது.