போலீஸ் விசாரணை 'தாங்கவில்லை'..சிபிஐ விசாரணை கோர ராவணன் முடிவு?
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ளது காலியம்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அதிமுக நிர்வாகியான அவர் அரசு கான்டிராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் தடுப்பு அணை கட்டப் போவதாகவும் அதற்கான டெண்டர் விடும் பணி நடப்பதாகவும் பொன்னுசாமிக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து தடுப்பணை கான்டிராக்ட் பெற சசிகலா உறவினர் ராவணனின் உதவியாளர் மோகன் என்பவரிடம் அவர் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் மோகன் கூறியபடி தடுப்பணை கான்டிராக்ட் பொன்னுசாமிக்கு கிடைக்கவில்லை. இதனால் தனது பணத்தை பொன்னுசாமி திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ராவணனும், மோகனும் பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பொன்னுசாமி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தியிடம் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் ராவணன், அவரது உதவியாளர் மோகன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ராவணன் ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு மணல் குவாரி லீசுக்கு எடுத்து தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கிலும், கான்டிராக்டர் ரவிக்குமாரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கிலும், வேலூர் புவனேஸ்வரன் என்பவருக்கும் மணல் குவாரி வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகளுக்காக ராணவனை போலீசார் நீதிமன்றங்களுக்கும், சிறைக்கும் அழைத்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆனால் ஆதாரம் இன்றி அவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், வேண்டும் என்றே அவரை அலைகழிப்பதாகவும் ராவணனின் வழக்கறிஞர் பா.பா. மோகன் தெரிவித்துள்ளார். இதனால் சிபிஐ விசாரணை கோர ராவணன் தரப்பு முடிவு செய்துள்ளது.
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்காக மோகன் ஆஜராகி வருகின்றார்.
மேலும், சமீபத்தில் தஞ்சையில் சசிகலாவின் கணவர் பொங்கல் விழா நடத்திய போது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் சகோதரரை அழைத்து வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் மத்திய அரசில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை எம்.நடராஜன் சொல்லாமல் சொன்னார்.
தற்போது ராவணன் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரினால், அவ்வாறு சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், மத்திய அரசு துணையுடன் ஜெயலலிதாவை வீழ்த்த அரசியல் வியூகம் வகுப்பட்டுள்ளது. மேலும், தாங்களும் போலீஸ் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கருதி வருவதாக கூறப்படுகின்றது. விரைவில் தமிழக அரசியலில் ஆடுபுலி ஆட்டத்தை காணலாம்.