சென்னையில் மீண்டும் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை: 4 பேருக்கு வலைவீச்சு
சென்னை: சென்னையை அடுத்துள்ள கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று மதியம் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
சென்னையை அடுத்துள்ள கீழ்க்கட்டளையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இன்று மதியம் வங்கி்க்கு முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் வங்கிக்குள் புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியைக் காட்டி காசாளரை மிரட்டி பணத்தை கொள்ளையடித்தனர். பின்பு தாங்கள் வந்த காரிலேயே ஏறி தப்பியோடிவிட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் தான் சென்னை பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடாவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் ரூ. 24 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் காரில் வந்து தான் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த கொள்ளையர்கள் குறி்தது இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்னொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.