எங்கள் விடுதலைக்கு இந்தியா உதவ வேண்டும்- கோருகிறார் பலுசிஸ்தான் தலைவர்
நியூயார்க்: பலுசிஸ்தானின் விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று பலுசிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவரான பிராகுமதக் பக்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் அரசால் பலுசிஸ்தானியர்கள் இனப்படுகொலைக்குள்ளாகின்றனர். இதனை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும். சர்வதேச சமூகத்துடன் பிராந்திய வல்லரசான இந்தியாவும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
பலுசிஸ்தானியர்கள் ஆயுதங்களைக் கோரவில்லை. எங்களுக்குத் தார்மீக அரசியல் ஆதரவுதான் தேவை. சர்வதேச சமூகம் இதை கவனத்தில் கொண்டிருப்பதை பாகிஸ்தான் ராணுவம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பலுசிஸ்தான் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் உருவாக்கியுள்ள அனைத்துக் கட்சிக் குழுவை நாங்கள் நிராகரிக்கிறோம். விடுதலைக்கு சற்றும் குறையாத எந்த ஒரு அதிகார அமைப்பையும் நாங்கள் கோரவில்லை.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மாகாணமாக ஏற்று ஆளுநராக, முதல்வராக பதவி வகிக்கும் பலுசிஸ்தானியர்கள் தங்களது அரசுப் பதவிகளை உதறித் தள்ளிவிட்டு எமது விடுதலை இயக்கத்துடன் இணைய வேண்டியது வரலாற்றுக் கட்டாயம்.
ஜம்மு காஷ்மீரத்தில் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் பாகிஸ்தான் அரசாங்கமே வழங்கி வருகிறது.
எமது விவகாரம் குறித்து இந்தியா பேசுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் எம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் அவர்.
பலூச் இனக்குழுவின் தலைவரான நவாபின் பேரன் பிராகுமதக் புக்தி. கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் நவாப் கொல்லப்பட்டார். தற்போது பிராகுமதக் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்.
பலுசிஸ்தானியர்களுக்கு பிரிந்து சென்று தனிநாடு அமைக்கக் கூடிய சுயநிர்ணய உரிமை என்று அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.