சென்னை என்கவுன்டர்: டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த நோட்டீஸை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ளது.
8 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறும் நீதி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
என்கவுன்டர்
சென்னை புறநகர் பகுதிகளான பெருங்குடி மற்றும் கீழ்கட்டளையில் வங்கிகளில் ரூ35 லட்சத்தை துப்பாக்கி முனையில் ஒரு மாத கால இடைவெளிக்குள்ளேயே மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் வங்கிக் கொள்ளைக் கும்பல் தலைவன் என்று சந்தேகிக்கும்படியான ஒரு நபரின் வீடியோ படத்தை சென்னை காவல்துறை வெளியிட்டது.
இந்த வீடியோ படம் வெளியிடப்பட்ட நிலையில் சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.
போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேரும் கொல்லப்பட்டது சர்ச்சையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்த நிலையில்
மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.