ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கி கணக்குகள் முடக்கம்: பாக். அதிரடி
இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் இருப்பிடத்தை அமெரிக்காவுக்கு தெரிவித்த பாகிஸ்தானிய டாக்டர் ஷகீல் அப்ரிதி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது அமெரிக்காவுக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தானோ பின் லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று சாதித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ, பாகிஸ்தானிய டாக்டர் ஷகீல் அப்ரிதியின் உதவியுடன் பின்லேடனின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தது.
அமெரிக்காவின் ஆலோசனைப்படி போலியான போலியோ விழிப்புணர்வு பிரச்சாரத்தை பின் லேடன் பதுங்கி இருந்த அப்போத்தாபாத்தில் மேற்கொண்டார் டாக்டர் அபிரிதி. இதற்காக அவர் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பின் லேடன் வீட்டைக் கண்டுபிடித்து உறுதி செய்து அமெரிக்காவுக்கு தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்கப் படைகள் ஒசாமாவை சுட்டுக் கொன்றன.
ஒசாமா கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியேற முயன்ற ஷகீலை அந்நாட்டு ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது. டாக்டர் ஷகீல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவரது பெயரிலும், அவரது மனைவி இம்ரானா கபூர் பெயரிலும் வங்கியில் ஏராளமான பணம் போட்டு வைத்திருந்தார். அதை நேற்று பாகிஸ்தான் அரசின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் முடக்கினர்.
தாங்கள் ஒசாமா இங்கு இல்லை என்று சொல்லியும் ஷகீல் காட்டிக் கொடுத்ததால் பாகிஸ்தான் பொய் சொன்னது வெளிச்சத்திற்கு வந்தது. அந்த கோபத்தில் தான் ஷகீல் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.