ஆந்திராவில் பல நூறு கோடி நில ஊழல்-தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு சிக்கல் வலுக்கிறது
ஹைதாராபாத்தின் அமீர்பேட் பகுதியில் மைத்ரிவனம் என்ற இடத்தில் 9.14 ஏக்கர் அரசு நிலம் ரோசய்யா முதல்வராக இருந்தபோது தனியாருக்கு விற்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு பல நூறு கோடி ரூபாயாகும். ஆனால், இதை மிகக் குறைந்த விலைக்கு விற்றதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர். ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையின்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான பி.பி.ஆச்சார்யா, டி.சன்யாசி அப்பா ராவ் ஆகியோர் அளித்த சாட்சியத்தில், இந்த நிலத்தை விற்பதற்கு தாங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறியிருந்தனர்.
ஆனாலும் ரோசய்யாவை இந்த வழக்கில் இருந்து ஊழல் தடுப்புப் பிரிவு விடுவித்தது.
இந் நிலையில், 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தந்த வாக்குமூலத்தை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ரோசய்யாவை ஊழல் தடுப்புப் பிரிவினர் விடுவித்தது தவறானது என்றும் தெலுங்கானா வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்த இரு அதிகாரிகளும் அளித்த வாக்குமூலத்தை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள வழக்கறிஞர்கள் சங்கம், ரோசய்யாவை தமிழக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.