அமைதிக்கான நோபல் பரிசுக்கு பில் கிளிண்டன் பெயர் பரிந்துரை
ஆஸ்லோ: இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு 231 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 188 பேரும், 43 நிறுவனங்களும் அடக்கம். நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் சிலர் புதுமுகங்கள், சிலர் பிரபலமானவர்கள் என்று நோபல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் கெய்ர் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஜெர்மனியை ஒருங்கிணைக்க பாடுபட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹெல்மட் கோல் மற்றும் முன்னாள் உக்ரைன் பிரதமரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான யுலியா டிமோஷென்கோ, அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனிங் ஆகியோரின் பெயர்கள் அடக்கம்.
இதில் யுலியா தற்போது சிறையில் உள்ளார். மேலும் அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இருந்து விக்கிலீக்ஸுக்கு ஆவணங்களைத் திருடிக் கொடுத்ததற்காக மேனிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 231 பேரில் ஒருவருக்கு வரும் அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 241 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.