மாநில ரயில்வே போலீசாரின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு-ஜெ கடும் எதிர்ப்பு
இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக தலைமைச் செயலாளருக்கு, ரயில்வே அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர், ரயில்வே வாரியத்தின் தலைவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ள 4 திட்டங்களை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1. பயணிகள் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்கு ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்.பி.எப்.) அதிக அதிகாரங்கள் வழங்குதல்.
2. ரயில் நிலையங்களில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை ïனிட்டுகளை ரயில்வே நிலையங்களாக மாற்றுவது.
3. அந்த ஆர்.பி.எப். போலீஸ் நிலையங்களின் நிலைய அதிகாரியாக, ஆர்.பி.எப். அதிகாரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது.
4. ரயில்வே நிலையங்களில் உள்ள 3 அடுக்கு பாதுகாப்பு முறையை (ஆர்.பி.எப்., மாநில அரசின் ரயில்வே போலீஸ், மாவட்ட போலீஸ்) 2 அடுக்கு முறையாக (ஆர்.பி.எப். மற்றும் மாவட்ட போலீஸ்) மாற்றுவதற்காக ஆர்.பி.எப். சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது.
இந்த 4 பிரிவுகளைப்பற்றியும் உங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
இந்த திட்டங்களை நியாயப்படுத்துவதற்காக சில குறிப்புகளை கூறியுள்ளனர். நீண்ட தூரம் போகும் ரயில்கள் பல மாநிலங்கள் கடந்து செல்கின்றன. இதனால், மாநில ரயில்வே போலீஸ் ரயில்வேயின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகும் நிலையில், பயணிகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சிறப்பு, அர்ப்பணிப்பு கொண்ட விசாரணை அமைப்பு தேவைப்படுகிறது என்று நியாயப்படுத்தப்படுகிறது.
மேலும், ரயில்வே சட்டம் மற்றும் ரயில்வே போலீஸ் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்.பி.எப்.க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் பட்சத்தில் சட்டவிரோத செயல்பாடுகளை கையாளுவதில் கூடுதல் திறன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ரயில் மற்றும் பிளாட்பாரங்களில் பயணிகள் தொடர்பான திருட்டு மற்றும் பல்வேறு குற்றங்களை ஆர்.பி.எப். போலீசார் மூலம் நடத்தப்படும், போலீஸ் நிலையங்கள் மூலம் மத்திய அரசே கையாளும் என்பதை இந்த திட்டங்கள் காட்டுகின்றன.
இந்த திட்டங்களின் மூலம் மாநில ரயில்வே போலீசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. மாநில ரயில்வே போலீஸ் சேவை என்பது ஆர்.பி.எப். மற்றும் மாவட்ட போலீஸ் ஆகியோருக்கு இடையிலான பாலமாக உள்ளது. இந்த பிரிவு இல்லாமல் போவதன் மூலம் ஆர்.பி.எப். மற்றும் மாநில போலீசாருக்கு இடையேயான ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.
மாநில ரயில்வே போலீசார் திருட்டு உள்ளிட்ட சில வழக்குகளை மட்டும் கையாளவில்லை. ரயில்வே தண்டவாளங்களில் நடக்கும் சாவை அவர்கள்தான் விசாரிக்கின்றனர். இனி இதுபோன்ற வழக்குகளை மாவட்ட போலீசுகளுக்கு மாற்றுவது என்பது மாவட்ட போலீசாருக்கு மேலும் அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும். ரயில் நிலையங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மாநில ரயில்வே போலீசாருக்கு கிடைக்கும் நிதி ஒதுக்கீடும் அந்தந்த மாநிலங்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.
ஆர்.பி.எப்.க்கு என்று தனி போலீஸ் நிலையங்களை அமைத்து, ஆர்.பி.எப்.யின் அதிகாரத்தை தொடர்ந்து செயல்படுத்தினால், ரயில்வே நிலையங்களுக்குள் மாவட்ட போலீசார் நுழைந்து வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்கு காலப்போக்கில் தடை ஏற்பட்டுவிடும். அதாவது சுருங்கச் சொன்னால் மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட இடத்தில், மத்திய அரசின் அதிகார தீவு போல் ரயில்வே நிலையங்கள் மாறிவிடும்.
ரயில்வே பாதுகாப்பு படை சட்டம் 1957-ல் திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு எடுத்துள்ள முடிவு, மாநில அரசு அதிகாரங்களை பறிப்பதுபோல் அமைந்துள்ளது. எனவே, இது இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தின் 246-வது பிரிவுக்கு எதிராக உள்ளது. பொது அமைதி மற்றும் போலீஸ் ஆகியவை அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில், மாநில அதிகாரத்துக்கு உட்பட்டவை. எனவே, அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.
அதுபோல் ஆர்.பி.எப். போலீஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு ஏதுவாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள சட்டத்திருத்தம், இந்திய போலீஸ் சட்டம் 1861-க்கு எதிரானது. எனவே, ரயில்வே அமைச்சகத்துக்கு தாங்கள், ரயில்வே பாதுகாப்பு சட்டம் 1957-ல் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள சட்டத்திருத்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.