அசாருத்தீனுக்கு எதிராக பிடி வாரண்ட்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்.பி.யுமான அசாருத்தீன் சஞ்சய் சோலான்கி என்பவருக்கு ரூ. 1.5 கோடிக்காண காசோலை கொடுத்தார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் காசில்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. இதையடுத்து சோலன்கி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழ்ககு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்ராந்த் வைத் அசாருத்தீனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தார். அசாருத்தீன் உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 7ம் தேதி அசாருத்தீனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கும் நாள் அன்று அசாருத்தீன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அப்பொழுதும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.