வார்த்தையை விட்ட ராஜபாண்டி- மதுரை மாநகராட்சியில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மோதல்
மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பேச வாய்ப்பு கேட்டு திமுக, அதிமுக உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
மதுரை மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்கியவுடன் அதிமுக மண்டலத் தலைவரை பேசுமாறு மேயர் அழைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக கவுன்சிலர்கள் முதலில் எதிர்கட்சியினரான தங்களுக்கு தான் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று மேயரிடம் தெரிவித்தனர்.
அதை ஏற்க மறுத்த மேயர், மதுரை மாநகராட்சியில் யாருக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்றார். இதனால் மேலும் அதிருப்தியடைந்த திமுகவினர், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சினால் கட்டப்பட்ட இலவச நவீன கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது உட்பட பல குற்றசாட்டுகளை தெரிவித்தனர்.
திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேச அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதைப் பார்த்த அதிமுக கவுன்சிலர்கள் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது மண்டலத் தலைவர் ராஜபாண்டி ஆவேசப்பட்டு வார்த்தைகளை விட்டுள்ளார்.
இதனால் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் சில திமுக கவுன்சிலர்கள் மேயர் இருக்கைக்கு செல்ல முயன்றனர்.
இதனால் திமுகவினரை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபைக் காவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். திமுகவினரை சபையில் இருந்து வெளியேற்ற முயன்றபோது, அதிமுகவினர் அவர்களை தாக்கினர். நிலைமை அத்துமீறுவதை உணர்ந்த மேயர், போலீசாரை சபைக்கு அழைத்தார். போலீசார் வந்து திமுக கவுன்சிலர்களை சபையில் இருந்து வெளியேற்றினர்.
வெளியே வந்த திமுகவினர் தங்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் திமுகவினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக தொடர் மின்வெட்டை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அரிகேன் விளக்கு, மெழுகுவர்த்தி ஆகியவற்றை கையில் பிடித்து கொண்டு மாநகராட்சி கூட்டத்திற்கு வந்திருந்தனர்.