பாட்னா கனரா வங்கியில் கொள்ளையடித்தது வினோத்குமாரின் கூட்டாளிகள் என தகவல்
பாட்னா: பீகார் தலைநகர் பாட்னா அருகே கனரா வங்கியில் புகுந்து கொள்ளையர்கள் ரூ. 18.0596 லட்சம் பணத்தை அடித்துச் சென்ற சம்பவத்தில் சென்னையில் கொல்லப்பட்ட வினோத்குமார் என்கிற சுஜாய் குமார் ரேவின் கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கனரா வங்கி ஒன்றில் 6 கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பாட்னா அருகே உள்ள பிக்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரேப் என்ற இடத்தில் கனரா வங்கியின் கிளை உள்ளது. இங்கு பிப்ரவரி 27ம் தேதி மாலை 3 மணியளவில் 4 மோட்டார் சைக்கிள்களில் 6 கொள்ளையர்கள் வந்தனர்.
இதில் வங்கியின் வெளியே நின்ற ஒருவர் மட்டும் முகமூடி அணிந்து கொள்ள மற்ற 5 பேரும் வங்கியின் உள்ளே வாடிக்கையாளர்களை போல நுழைந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து வங்கி மேலாளர் ஆர்.கே.செளத்ரி உள்ளிட்ட பணியாளர்களை ஒரு அறையிலும், அங்கிருந்த வாடிக்கையாளர்களை இன்னொரு அறையிலும் அடைத்தனர்.
அதன் பிறகு காசாளரை மிரட்டி வங்கியில் இருந்து ரூ.17.96 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அடைக்கப்பட்ட அறைகளை கொள்ளையர்கள் வெளியே தாளிடவில்லை. இதனால் சிறிது நேரத்தில் அறைகளில் இருந்து வெளியே வந்த வங்கி அதிகாரிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாட்னா ஊரக மாவட்ட எஸ்.பி.மனோஜ் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வினோத்குமாரின் கூட்டாளிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பாட்னா போலீஸார் சந்தேகப்படுவதாக அங்கு வினோத்குமார் உள்ளிட்டோர் தொடர்பாக முகாமிட்டுள்ள சென்னை போலீஸார் தங்களது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பீகார் போலீஸாருடன், தமிழக போலீஸாரும் தகவல்களை சேகரித்து வருகின்றனராம். சென்னையில் நடந்ததைப் போல பாட்னா சம்பவத்திலும் நடந்துள்ளனர் கொள்ளையர்கள். கூட்டம் அதிகம் இல்லாத நேரத்தில்தான் போயுள்ளனர். துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்துள்ளனர். படு சாவகாசமாக கிளம்பிப் போயுள்ளனர்.
வினோத்குமாரின் கட்டமைப்பு மிகப் பெரிதாக இருக்கலாம். பல்வேறு ஊர்களில் அவர்கள் வங்கிகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.