பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை - அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி
அடுத்த மாதம் பெட்ரோல் விலை ரூ 5 வரை உயரவிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, "வடமாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்ததும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த இருப்பதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறதே? அப்படி ஏதேனும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசிடம் உள்ளதா?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் கேள்விக்கு மறுப்பு தெரிவித்து மந்திரி ஜெய்பால் ரெட்டி கூறுகையில், "5 மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் என்பது ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வெறும் கற்பனை செய்தி. இதில் உண்மை ஏதுமில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை.
இப்போது கச்சா எண்ணெய் விலை பேரல் 107 டாலராக உயர்ந்துள்ளது. இது கொஞ்சம் நெருக்கடியைத் தந்துள்ளது.
டிசம்பர் மாதத்தில்தான் பெட்ரோல் மீதான விலையில் லிட்டருக்கு 78 பைசா குறைக்கப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ.65.64-க்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.91 -க்கும் விற்கப்படுகிறது.
'தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. ஆதலால், பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது மிகத்தேவையான ஒன்று' என்று இந்த நிறுவனங்கள் கோரி வருகின்றன. அதேநேரம் மக்கள் நலன், விலைவாசி போன்றவற்றையும் பார்க்க வேண்டியுள்ளது," என்றார்.