சென்னையில் சிக்னல் கோளாறால் மின் ரயில் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு!
சென்னை போக்குவரத்தின் உயிர்நாடி மின்சார ரயில் சேவைதான். எப்போமே, குறிப்பாக காலை நேரங்களிலும், மாலையிலும் மின்சார ரயில்களில் கூட்டம் அலை மோதும். தற்போது பஸ் கட்டணம் வேறு உயர்ந்து போய் விட்டதால், நிறையப் பேர் ரயிலை நாடி ஓடி வருகின்றனர். இதனால் பீக் அவர் எனப்படும் காலை, மாலை நேரங்களில் ரயில் பயணிகள் பெரும் அவஸ்தையுடன்தான் பயணிக்க வேண்டியுள்ளது. காலை வைக்கக் கூட இடமில்லாமல் சர்க்கஸ் கலைஞர்கள் போல காலை ஒருபக்கமும், கையை ஒருபக்கமும் வைத்துக் கொண்டுதான் பயணிகள் பயணிக்கிறார்கள்.
இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறுகளால் அடிக்கடி ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இன்று காலையும் அப்படி ஒரு அவஸ்தையை பயணிகள் சந்திக்க நேரிட்டது.
தாம்பரம்-குரோம்பேட்டை இடையே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் தாம்பரம்-சென்னை பீச் இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்ததப்பட்டது. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். நீண்ட நேர தாமதத்திற்குப் பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னரே ரயில்கள் இயங்கத் தொடங்கின.
இந்த குழப்பத்தால் பலரும் தாமதமாகவே அலுவலகம் செல்ல நேரிட்டது.