6 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கம்?
கூடங்குளம் போராட்டத்திற்கு பணம்: 6 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்க முடிவு
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 6 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, பல மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால் அணுமின் நிலைய உற்பத்தி பாதிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது.
இந்த நிலையில் அணுநிலைய எதிர்ப்பு போராட்டத்தை சில தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பதாகவும், அதற்காக வெளிநாடுகளில் இருந்து பணம் பெறப்படுவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்தனர். இதில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் உள்ள சில தொண்டு நிறுவனங்கள், முறையான கணக்குகள் இல்லாமல் ஏராளமான பணம் டெபாசிட் பெற்றிருப்பது தெரிய வந்தது.
இதேபோல மொத்தம் 12 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் ஆராயப்பட்டது. இதில் 6 தொண்டு நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் சட்ட விரோதமான முறையில் போராட்டத்திற்கு உதவும் தொண்டு நிறுவனங்களின் பெயர்களை வெளியிடமாறு பல்வேறு கட்சிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து சில தொண்டு நிறுவனங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களின் பெயர்கள்:
1.தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம்
2.தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம்
3.நாகர்கோவில் பார்வதிபுரம் ரூரல் அப்லிப்ட் சென்டர்
4.குட்விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட்
5.ஈஸ்ட்கோஸ்ட் ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட் பவுண்டேசன்
6.சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் பார் எஜூகேசன்.
இதில் தூத்துக்குடி மறை மாவட்ட சங்கம், நாகர்கோவில் ரூரல் அப்லிப்ட் சென்டர், குட்விஷன் சேரிட்டபிள் டிரஸ்ட், ஈஸ்ட்கோஸ்ட் ரிசர்ச், டெவலப்மென்ட் பவுண்டேசன் ஆகிய நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ரூரல் அப்லிப்ட் சென்டர் நிறுவனம் குமரி மாவட்டம் கீழமணக்குடி கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ள வீடுகளை அளவிட்டு அதன் தரத்தை நிர்ணயித்தனர். அதேபோல நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இந்நிறுவனம் மேற்கொள்ளும் வறட்சி நிவாரணப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பிறகு நிதி முறைகேடு தொடர்பாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி நாகர்கோவில் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.மரியஸ்டீபன் உள்துறை அதிகாரிகளிடம் மேல் முறையீட்டு மனு அளித்துள்ளார்.
இது குறித்து ரூரல் அப்லிப்ட் சென்டர் நிறுவனம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய உள்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு கடந்த மாதம் எங்கள் வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக தகவல் மட்டுமே வந்துள்ளது. எங்கள் நிறுவனம் நெல்லை, குமரி மாவட்டங்களில் சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இதற்கான கணக்குகள் முறையாகப் பராமரித்து வருகின்றது.
கூடங்குளத்தில் நடைபெறும் போராட்டத்தை எங்கள் நிறுவனம் ஆதரிக்கவும் இல்லை, பண உதவியும் செய்யவில்லை. இந்த நிலையில் எங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கை, தொண்டு நிறுவனங்களின் மீதான மத்திய அரசின் மறைமுக தாக்குதலை காட்டுகின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மறை மாவட்ட சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எங்கள் நிறுவனத்தில் உள்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வங்கி கணக்குகளை முடக்கியது உண்மை தான். ஆனால் ஆய்வில் எந்த தவறும் கண்டறியப்படவில்லை.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து எங்களுக்கு முறைப்படி எந்த தகவலும் வரவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கூடங்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்கள் இயக்க அமைப்பாளர் மனோ தங்கராஜின், குட்விஷன் சேரிட்டபிள் நிறுவனத்தின் கருங்கல் கிளை வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் குற்றச்சாட்டை மனோ தங்கராஜ் மறுத்துள்ளார்.
மேலும் தூத்துக்குடி மற்றும் இடிந்தகரையில் செயல்பட்டு வரும் ஈஸ்ட்கோஸ்ட் ரிசர்ச் மற்றும் டெவலப்மென்ட் பவுண்டேசன் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் புஷ்பராயன், கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றார்.
இதேபோல தமிழகம் முழுவதும் சுமார் 77 தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகள் குறித்து மத்திய அரசு விசாரித்து வருகின்றது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களை கண்காணிக்கும் பணியில் உள்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.