நிதிஷ், மம்தா, முலாயம், நாயுடு, நவீன் பட்நாயக்: 4வது அணியை உருவாக்க அருண் நேரு தீவிரம்
நேரு குடும்பத்தைச் சேர்ந்த அருண் நேரு, 1988ம் ஆண்டு வரை மறைந்த பிரதமர் ராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர். ராஜிவ் காந்தி எடுத்த மிக முக்கிய முடிவுகளுக்கும் காரணமாக இருந்தவர் அருண் நேரு தான். குறிப்பாக, 1986ம் ஆண்டு ராம்ஜென்ம பூமி-பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட ராஜிவ் காந்தி எடுத்த முடிவுக்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவர் அருண் நேரு.
ஆனால், 1988ம் ஆண்டு ராஜிவ்-நேரு இடையே விரிசல் ஏற்பட, ராஜிவுக்கு எதிராக ஜனதா தளத்தை உருவாக்கி நாடு முழுவதும் பெரும் அலையை ஏற்படுத்திக் கொண்டிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் வி.பி.சிங்குடன் கைகோர்த்தார் அருண் நேரு.
1989ம் ஆண்டு தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற, பாஜக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி.சிங் பிரதமராகவும் மிக முக்கிய காரணமாக விளங்கியதும் அருண் நேரு தான். பிரதமர் பதவிக்கு ஜனதா தளத்தின் பெரும் தலைவர்களான தேவி லால் மற்றும் சந்திர சேகர் ஆகியோர் போட்டியில் இறங்கியபோது, அவர்களை சமாளித்து வி.பி.சிங்கை ஆட்சியில் அமர்த்தினார் அருண் நேரு.
அரசியலில் திரைமறைவு வேலைகளுக்குப் பேர் போன அருண் நேரு, அடுத்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதோடு, தனது பிஸினஸ் வேலைகளில் தீவிரமானார்.
இந் நிலையில் நெடுங்காலத்துக்குப் பின் மீண்டும் தனது அரசியல் திரைமறைவு வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
இந்த முறை தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகளுக்கு மாற்றாக நான்காவது அணியை உருவாக்குவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே 4வது அணியை உருவாக்க தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முயன்றார்.
ஆனால், அடுத்த பிரதமராக என்னை அறிவித்தால் தான் ஆச்சு என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், அதே ஆசையுடன் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் 4வது அணிக்கு கை கொடுக்கவில்லை. இதனால், அந்த முயற்சி ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டது.
இந் நிலையில் புதிய நான்காவது அணியை உருவாக்கும் முயற்சிகளில் அருண் நேரு களமிறங்கியுள்ளார். முதல் கட்டமாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஒரிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தள் தலைவருமான நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் தலைவரான சந்திரபாபு நாயுடு ஆகியோரை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிரமாகியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகக் கருதப்படும் முலாயம் சிங்கையும் இந்த அணிக்குள் இழுப்பது அடுத்த திட்டமாம்.
முலாயம் இந்த அணிக்கு வந்தால் மாயாவதி காங்கிரசுடன் கைகோர்க்கக் கூடும் என்பதால் அவரையும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலமாக பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கருதப்படும் ஜெயலலிதாவையும் இந்த அணி தூரமாக ஒதுக்கி வைக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மதசார்ற்ற ஜனதா தளத்தை இந்த அணிக்குள் நேரு கொண்டு வர முயல்வார் என்கிறார்கள்.