பருத்தி ஏற்றுமதிக்கு தடை- நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு
பருத்தி ஏற்றுமதிக்கு தடை
இந்தியாவில் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தியில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பருத்தி சாகுபடிக்குச் சாதகமற்ற தட்ப வெப்ப நிலவி வருவதால், மராட்டிய மாநிலத்தில் பருத்தி உற்பத்தி மிகக் குறைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக பருத்தி விலையில் மிகக் கடுமையான உயர்வு இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2010-11 -ம் ஆண்டு இந்தியாவின் பருத்தி உற்பத்தி அளவு 330 லட்சம் பேல்கள் இருந்தது என்றும், இதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் வரை வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியது என்றும், உள்நாட்டு துணி மில்களின் தேவை சுமார் 216 லட்சம் பேல்கள் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளதாலும், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருப்பதாகவும்' மத்திய அரசு
அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மோடி எதிர்ப்பு
பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ள மத்திய அரசின் முடிவு தமக்கு அதிர்ச்சியளிப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகசிங்குக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் முடிவானது தொழிலதிபர்களுக்கே சாதகமானது என்றும் மாநில விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பருத்தி ஏற்றுமதியை முற்று முழுதாக தடை செய்ததை விலக்கிக் கொண்டு குஜராத்தில் விளையும் சங்கர் ரக பருத்தியை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.