உத்தர்கண்ட்டில் இழுபறி: ஆட்சியமைக்க போவது பாஜகவா? காங்கிரஸா?-முடிவு மாயாவதி, சுயேச்சைகளிடம்!
இங்கு மொத்தமுள்ள 70 இடங்களில் ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை. ஆனால், பாஜக 32 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும் சிறு கட்சிகளும் சுயேச்சைகளும் 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில் இந்த 32, 31 என்ற எண்ணிக்கையை பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி பெற்று வருகின்றன. இந்த இரு கட்சிகளும் மாறி மாறி 31, 32 என்ற எண்ணிக்கையிலேயே அல்லாடி வருகின்றன.
ஆனால், மெஜாரிடிக்குத் தேவையான 35 இடங்களை இரு கட்சிகளும் பிடிக்கும் நிலையில் இல்லை.
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் ஒரு தொகுதியில் முன்னணியில் இருந்த சமாஜ்வாடி கட்சி அதிலும் பின் தங்கிவிட்டது. இதனால் அந்தக் கட்சிக்கு இங்கு முட்டை தான் கிடைத்துள்ளது.
இந் நிலையில் இந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மாயாவதி அல்லது சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் உதவி தேவைப்படும்.
இதனால், இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க பெரும் போட்டி ஏற்படலாம் என்று தெரிகிறது.
காங்கிரசோ, பாஜகவோ யார் ஆட்சியமைத்தாலும் மாயாவதி அல்லது சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க முடியும்.
இதனால் இங்கு நிலையான அரசு அமைவது கஷ்டமே. மாயாவதி யாருக்கு ஆதரவு தந்தாலும் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறக் கூடிய சுபாவம் உள்ளவர். அதே போல சிறிய கட்சிகள், சுயேச்சைகள் அமைச்சர் பதவி தருவோருக்கு, அதிலும் நல்ல வருமானம் உள்ள துறையைத் தரும் கட்சிக்கே ஆதரவு தருவர்.
இதனால், இவர்களது ஆதரவும் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கோ பாஜகவிடமிருந்து காங்கிரசுக்கோ மாற ஒரு நிமிடம் கூட ஆகாது. இதனால் உத்தரகண்ட் மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் காங்கிரசும் பாஜகவும் ஒருவரை ஒருவர் கவிழ்த்துக் கொண்டு, மாறி மாறி ஆட்சிகளை அமைக்க வாய்ப்புள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2000ம் ஆண்டில் பிரிக்கப்பட்டது தான் உத்தர்கண்ட் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.