உலக கோப்பையை வென்ற 3 கபடி வீராங்கனைகளுக்கு அரசு வேலை - மகாரஷ்டிரா அரசு அறிவிப்பு
மும்பை: பாட்னாவில் நடைபெற்ற பெண்களுக்கான முதல் உலக கோப்பை கபடி போட்டியில் வெற்றிப் பெற்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு அரசு வேலை அளிக்க உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பாட்னாவில் பெண்களுக்கான முதல் உலககோப்பை கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுரேகா பர்டாக்கே, அபிலாஷா, அணியின் துணை கேப்டன் தீபிகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த மேற்கண்ட 3 பேருக்கும், அரசு பணி வழங்கி கெளரவிக்கப்படும் என்றும், அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பென்டகிரிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பபடும் என்றும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜீத் பவார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் மமதா பூஜாரி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல ஓரிசா வீராங்கனை ரஷ்மிதா சாஹூக்கு, ஓரிசா மாநில ஒலிம்பிக் சங்கம் ரூ.50,000 பரிசுத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.