இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு: ஈரான் பத்திரிகைக்கு வேலைபார்த்தவர் கைது!
டெல்லி: கடந்த மாதம் டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் ஈரான் பத்திரிக்கை ஒன்றுக்கு தான் வேலை பார்த்ததாக கூறியுள்ளார்.
கடந்த மாதம் 13ம் தேதி டெல்லியில் பிரதமர் வீட்டுக்கு அருகே இஸ்ரேல் தூதரக கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் மனைவி, கார் டிரைவர், அருகில் நின்ற காரில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.
பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. அதேசமயம், இந்த தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதை இந்திய போலீசார் கண்டுபிடித்தும் அதை வெளியே சொல்லத் தயங்குகின்றனர் என்றும் இஸ்ரேல் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் உள்ளூர் பத்திரிக்கையாளர் செய்யது முகமது காஸ்மி (50) என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் ராஜன் பகத் கூறியதாவது,
இந்த தாக்குதலுக்கும் காஸ்மிக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட கடந்த 2 நாட்களாக அவரது வீட்டை சோதனை செய்தோம். அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு விசாரணை நடத்தப்படும்.
அவர் எந்த செய்தி நிறுவனத்திற்கு வேலை பார்த்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கைதானவருக்கும் தூதரக காரில் ஸ்டிக்கர் குண்டை ஒட்டியவருக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்துள்ளது என்றார்.
இருப்பினும் ஈரானிய செய்தித்தாள் ஒன்றுக்கு வேலை பார்த்ததாக காஸ்மி விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.