விலைவாசி உயர்வே காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்: சோனியா

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், வெற்றியோ தோல்வியோ ஒவ்வொரு தேர்தல் முடிவும் எங்களுக்கு ஒரு பாடம் தான். அந்த வகையில் இந்தத் தேர்தல் தோல்விகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொள்வோம. எங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வோம்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக ராகுல் காந்தி கடுமையாக பாடுபட்டார். ஆனாலும் தோற்றுள்ளோம். இந்தத் தோல்வியை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். உத்தரப் பிரதேசத்தில் கட்சிரீதியில் நாங்கள் பலமாக இல்லை, கட்சியின் கட்டமைப்பே சரியில்லை. வேட்பாளர் தேர்வும் சரியல்ல. அது போக ஏகப்பட்ட காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் களத்தில் குதித்து கெடுத்துவிட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவுகளால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் வராது. எங்களது கவனம் எல்லாம் 2014ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலின் மீது தான் இனி இருக்கும்.
தேர்தல் தோல்விக்கு ஊழல் காரணமல்ல. ஊழல் விஷயத்தில் நாங்கள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தோம்.
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் தான் ஏராளமாக உள்ளனர். இது தான் எங்களது பிரச்சனை (அதாவது கட்சியில் தொண்டர்கள் கம்மி, எல்லோருமே தலைவர்கள் தான் என்ற அர்த்தத்தில் கூறினார்).
தோல்விக்கு பணவீக்கமும் விலைவாசி உயர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து குஜராத், கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் வரவுள்ளன. அதற்காக இப்போதே தயாராவோம் என்றார் சோனியா.
வரும் 2014ம் ஆண்டில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, நாம் 2012ல் இருக்கிறோம். நீங்கள் 2014 பற்றி கேட்கிறீர்கள். இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இப்போது இந்தக் கேள்வியே தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications