மணி விழா கொண்டாடும் நான் இளைஞர் அணி பொறுப்பாளராக இருக்கலாமா?.. ஸ்டாலின்
சேலத்தில் ஏற்கனவே நடப்பதாக இருந்து பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உள்கட்சிப் போராட்டத்தால் தள்ளிப் போன இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நடந்தது. வீரபாண்டி ஆறுமுகமும் கலந்து கொண்டார். அவரும், ஸ்டாலினும் அன்னியோன்யமாக பேசிக் கொண்டதைப் பார்த்து தொண்டர்கள் பூரிப்படைந்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்,
1980-ல் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியை துவங்கினாலும், தி.மு.கவில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பது இளைஞர்கள் தான் என்றும், 1967-ல் தி.மு.க ஆட்சியை பிடித்ததற்கு முக்கியமான காரணம் கட்சியில் செயாலாற்றி கொண்டிருந்த அன்றைய இளைஞர்கள் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்போது மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து மாபெறும் போராட்டத்தை நடத்தி உயிர் தியாகம் செய்தவர்கள் இளைஞர்கள் தான் என்றும், தான் மாணவனாக இறுப்பதற்கு முன்னரே சிறுவனாக இருந்தபோது கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை துவங்கியதாகவும், இப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் துவங்கப்பட்ட இளைஞர் தி.மு.க அந்தந்த பகுதியின் பெயரில் மாயவரம் இளைஞர் தி.மு.க என்றும், சேலம் இளைஞர் தி.மு.க என்றும் அழைக்கப்பட்டு வந்ததாகவும்,
இதையெல்லாம் ஒன்றினைக்கத்தான் தலைவர் கலைஞர் அவர்களும், பொது செயலாளரும் 1980-ல் திமுக இளைஞர் அணியை துவங்கினார்கள் ஆனால், அந்த இளைஞர் அணியை சரியாக கவனிக்காமல், நேரடியாக தேர்வு செய்யாமல், மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யும் நபர்களுக்கு அப்படியே பொறுப்புகள் கொடுத்து வந்தோம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஒன்றிய இளைஞர் அணியின் அமைப்பாளர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற வந்தார், அவரை கூப்பிட்டு வாழ்த்து கூறிவிட்டு அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்ட பின்னர் தலைவர் அந்த அமைப்பாளரை பார்த்து உன்னுடைய வயது என்ன...? என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞர் அணியின் அமைப்பாளர், எனக்கு 55 ஆகுது தலைவரே என்றார். இதற்கு பெயர்தான் இளைஞர் அணியா...? என்று முடிவு செய்த தலைவர் அவர்கள் இப்போது ஒவொரு மாவட்டமாக சென்று இளைஞர்களை மட்டுமே தேர்வு செய்து இளைஞர் அணிக்கு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அங்கிருந்த நான், தலைகுனிந்து வெட்கப்பட்டேன். ஏனென்றால், எனக்கு, 60 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு நான் மணிவிழா கொண்டாட உள்ளேன். இந்த நிலை இருக்கக்கூடாது என்பதற்காக தான் வயது வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளது. தலைவரும் அதை தான் விரும்புகிறார். எனவே, 30 வயதுக்குட்பட்டவர் தான் பொறுப்பில் வரவேண்டும் என, நேர்காணலை நடத்துகிறோம்.
அதற்காகவே நான் இன்று இங்கு வந்துள்ளேன். அது போலவே தி.மு.கவில் மகளிர் அணி, இலக்கிய அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, வழக்குறைஞர் அணி என்று பல அணிகளும் இருக்கின்றன இந்த அணிகளுக்கும் பொறுப்பாளர்களை சரியாக தெரிவு செய்யபப்டுவதிலை.... சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சோ.க.சண்முகம் என்ற ஒருவர் நம்முடைய கட்சியில் இருந்தார். அவருக்கு சென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணியின் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.
அவர் பொறுப்புக்கு வந்தவுடன், தலைவரிடம் வாழ்த்து பெறுவதற்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். அப்போது நானும் தலைவரின் பக்கத்திலிருந்தேன்... அவருக்கு வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்தவுடன், “என்ன சண்முகம் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா”...? என்று தலைவர் சிரித்துக்கொண்டே கம்பராமாயனத்தை எழுதியது யார் என்று கேட்டார்.
ஒரு வினாடி கூட யோசிக்காத சண்முகம் “தலைவரே நீங்கதான் எழுதினீங்க...” என்று சொன்னார். கேள்வி சரியாக புரியவில்லையோ என்ற சந்தேகத்தில் தலைவர் அவர்கள் மீண்டும் கேட்டார்... “கம்ப ராமாயணத்தை எழுதியது யார்...? என்று. “என்னங்க தலைவரே இப்படி கேக்கறீங்க”... அதை “நீங்க தான் எழுதினீங்க..” என்று மறுபடியும் சொன்னார்.
நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நம்முடைய கட்சியின் துணை அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும்... என்று கூறினார். மாவட்ட செயலாளர்களால் நியமனம் செய்யப்படுபவர்கள் சரியானவர்களாக இருப்பதில்லை என்ற நோக்கில் கூறினார் என்றர் ஸ்டாலின்.