செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் - டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்.பி.யுமான அசாருதீன், சஞ்சய் சோலன்கி என்பவருக்கு ரூ.1.5 கோடிக்கான காசோலை கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் காசில்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது. மேலும் சோலங்கிக்கு பணம் தர அசாருதீன் மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து சோலன்கி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் இவ்வழக்கில் 10க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அசாருதீன் மீது ஜாமீனில் வெளி வர இயலாத பிடிவாரண்ட்டை மெட்ரோபாலிட்டன் நீதிபதி விக்ராந்த் வைத் பிறப்பித்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அசாருதீன், இப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி விக்ராந்த் தெரிவித்த தீர்ப்பில் கூறியதாவது,
பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ள விரும்பினால் குற்றவாளி (அசாருதீன்) முதல் முறையே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் குற்றவாளி அலட்சியமாக செயல்பட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
செக் மோசடி வழக்கில் நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதாக கருதினால், மொத்த தொகையில் 10 சதவீதத்தை அபராதமாக விதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அசாருதீனுக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும் அசாருதீனுக்கு பிணைப் பத்திரமும், உறுதி மொழியும் அளித்த அவரது நண்பருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகின்றது என்றார்.
சஞ்சய் சோலன்கிக்கு அளிக்க வேண்டிய ரூ.1.5 கோடி பணத்தை திரும்ப அளிப்பதாக அசாருதீன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.