இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து முடிவெடுக்கவில்லை-எஸ்.எம்.கிருஷ்ணா
சென்னைக்கு இன்று வந்தார் கிருஷ்ணா. அவரிடம், அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. அதை இந்திய அரசு ஆதரிக்கப் போகிறதா, அல்லது எதிர்க்கப் போகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், அதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. யோசித்து முடிவெடுப்போம். தமிழக தலைவர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றையும் பரிசீலிப்போம் என்றார்.
பின்னர் அவரே, இலங்கையுடன் நமக்கு நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது என்றும் பொடி வைத்துப் பேசினார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பிற அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கூறி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். அதிலும் முதல்வர் ஜெயலலிதா அடுத்தடுத்து 2 முறை பிரதமருக்குக் கடிதமும் அனுப்பினார். வழக்கம் போல அதற்கு பிரதமரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.