மமதா அறிவித்தபடி 26 புதிய ரயில்சேவைகள் அறிமுகம்-ஆனால் தமிழ்நாட்டுக்கு?!
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாட்டின் சேலம்- காட்பாடி இடையே வாரத்துக்கு 6 நாள் மின்சார ரயில் சேவை உட்பட 26 ரயில்சேவைகளும் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் நடைமுறைக்கு வரும்.
ஆவடி-சென்னை பீச், சென்னை பீச்- கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை பீச், சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், திருவள்ளூர்- சென்னை சென்ட்ரல் இடையேயான புறநகர் சேவை அதிகரிக்கப்படுகிறது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 132 ரயில்வேவைகளில் தற்போது அறிவிக்கப்பட்ட 26 சேவைகளுடன் மொத்தம் 115 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
இதேபோல் சேவை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட 22 ரயில்களில் 19 ரயில்களில் அறிவித்தபடி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
எஞ்சியவை அனைத்தும் மார்ச் 31-ந் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் எதிர்பார்ப்புகள்
புதிய ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள்:
மன்னார்குடி-பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி-திருக்குவளை-திருத்துறைப்பூண்டி, காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் அகலப்பாதை, கோயம்புத்தூர்-பழனி அகலப்பாதை திட்டம், செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டை ரயில்பாதை திட்டம், விழுப்பும்-திருச்சி-திண்டுக்கல் இரட்டை ரயில்பாதை திட்டம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.
இதேபோல் தஞ்சாவூர்-திருச்சி இரட்டை ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்தவும், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி, அரியலூர்-தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, கும்பகோணத்திலிருந்து விருத்தாசலம் வழியாக ஜெயங்கொண்டம், திண்டுக்கல்-கம்பம்-குமுளி-எரிமேலி ஆகிய ரயில் திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது..
திருப்பதியிலிருந்து மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, வேலூருக்கு நன்னிலம்,சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லக் கூடிய தினசரி ரயில் இயக்க வேண்டும்.
டேராடூ-டெல்லி-சென்னை ரயிலை மதுரை வரைக்கும் தாதர்(மும்பை)- யஷ்வந்த்பூர்(பெங்களூர்) ரயிலை தருமபுரி, ஈரோடு, மதுரை வழியாக திருநெல்வேலிக்கும் மன்னார்குடி- திருச்சி ரயிலை மானாமதுரைக்கும் நீட்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் திருச்சி-மதுரை- திருநெல்வேலி இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும், டெல்லி- கன்னியாகுமரி இடையேயான வாராந்திர ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்பதும் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான கோரிக்கையாகும்.
இத்திட்டங்களை நிறைவேற்ற ரூ900 கோடி ஒதுக்க வேண்டும் என்று அண்மையில் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் தினேஷ் திவேதியை சந்தித்து வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு செல்லும் வாராந்திர ரயில் (16538/16537), தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இந்த ரயில், காலை 9 மணிக்கு முன் நாகர்கோவில் வரும் வகையிலும், பெங்களூருவுக்கு காலை, 8 மணிக்கு முன்பாக சேரும் வகையிலும் இயக்க வேண்டும்.
வேளாங்கண்ணி, நாகூர், தஞ்சாவூர், திருவாரூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கொச்சுவேலியில் இருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு, தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து, இரவு 7 மணிக்கு
புறப்பட்டு, திருச்சிக்கு, அதிகாலை, 5 மணிக்கு செல்லுமாறு கால அட்டவணை அமைத்து, மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல வேண்டுமானால், காலையில், சென்னை சென்று பின் பகல் முழுவதும் தங்கியிருந்து, மாலையில், ஐதராபாத் செல்லும் ரயிலில் பயணிக்க வேண்டும். இதனால், பகல் நேரம் முழுவதும் வீணாகிறது. எனவே, ஐதராபாத்தில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு, தினசரி ரயில்
இயக்கினால், தமிழகத்தின் அனைத்து முக்கிய மாவட்டங்களில் இருந்தும், ஐதராபாத்திற்கு செல்ல நேரடி ரயில் வசதி கிடைக்கும்.
சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு, தினசரி ரயில் இயக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு, பல்வேறு தொழில் நிமித்தம் செல்பவர்கள் வசதிக்காக, திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும், திருவனந்தபுரம்-மங்களூரு (16603/16604) மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் ஆகியவையும் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள்.